24 Tamil News
அரசியல்

'அ.தி.மு.க.வுடனான அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்'... தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்

N.F.Rifka

admin

'அ.தி.மு.க.வுடனான அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்'... தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வரும் அன்புமணி ராமதாஸ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

பா.ம.க. பெயரைப் பயன்படுத்தி அன்புமணி, அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது சட்டவிரோதம் என்றும், கூட்டணி குறித்து பேச தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தலைமை தேர்தல் ஆணையருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், பா.ம.க. பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் அன்புமணி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க. தலைவர் என அன்புமணி உரிமை கோர முடியாது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமைக்கு இல்லை. எனக்கு மட்டுமே உரிமை உள்ளது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியது சட்டவிரோதமானது. அவரது செயல்பாடு பா.ம.க.வின் அமைப்பு சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மோசடி செயல்களில் ஈடுபட்டு தலைவர் பதவி காலத்தை அன்புமணி நீட்டித்துக் கொண்டார்.

அன்புமணி கட்சித் தலைவராக இருந்த போது தேர்தலில் தோல்வி அடைந்ததால் பா.ம.க. அங்கீகாரத்தை இழந்தது. அன்புமணி தனது தலைவர் பதவியை நீட்டிக்க மோசடி செய்துள்ளார். அன்புமணியை பா.ம.க. தலைவராக நீட்டித்ததற்கு எதிரான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நான் பா.ம.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அனுமதியின்றி பா.ம.க. பெயரை அன்புமணி பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.