'துரந்தர் 2' திரைப்படத்திற்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
Thivarakar
editor

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள 'துரந்தர் 2' திரைப்படத்திற்குத் தமிழகத்தில் தடை விதிக்கக் கோரிய பொதுநல மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டிற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதிகள் அதிரடியாகத் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், பெரும் பொருட்செலவில் உருவான 'துரந்தர் 2' திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:
தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இப்படத்தில் மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளைப் பாராட்டும் வகையில் ஒரு சார்பான கருத்துக்கள் உள்ளன.
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளதால், தேர்தல் முடியும் வரை இப்படத்தைத் தமிழகத் திரையரங்குகளில் திரையிடத் தடை விதிக்க வேண்டும்.
இந்த மனு நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்க மறுத்துத் தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்றம் முன்வைத்த முக்கியக் காரணங்கள்:
ஆதாரமின்மை: படத்தில் எந்தக் காட்சிகள் அல்லது வசனங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதை மனுதாரர் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
தணிக்கைச் சான்றிதழ்: மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை.
உயூகத்தின் அடிப்படையிலான புகார்: ஆதாரமற்ற மற்றும் தெளிவற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு திரைப்படத்திற்குத் தடை விதிக்க முடியாது.
"திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் விதிகளை மீறுகின்றன என்பதில் தெளிவில்லை. இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு," என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் 'துரந்தர் 2' திரைப்படம் தொடர்ந்து திரையிடப்படுவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.
