9 தமிழக மீனவர்கள் கைது.. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
N.F.Rifka
admin

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று (02.01.2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், தொடர்ந்து இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (03.01.2026) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை மீனவ கிராமத்திலிருந்து 9 மீனவர்கள் இரண்டு மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 02.01.2026 அன்றிரவு இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகக் கவலையளிக்கிறது. புத்தாண்டின் தொடக்கத்திலேயே நடைபெற்றுள்ள இச்சம்பவம், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அவல நிலையை மீண்டும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று தொடர்ந்து கைது செய்வதும், அவர்களது மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்வதும் தடையின்றி நடைபெறுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 73 மீனவர்களும், 251 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் காவலில் உள்ளது. இந்தத் தொடர்ச்சியான கைது சம்பவங்கள், தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களிடையே பெருத்த இன்னல்களையும், பதட்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

