தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: 326 மத்திய பார்வையாளர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்
24 Tamil News
reporter

புது தில்லி/சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மத்திய பார்வையாளர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் எஸ்.எஸ். சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். இந்தப் பணிக்காக மொத்தம் 326 மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 136 பேர் பொதுப் பார்வையாளர்களாகவும், 40 பேர் காவல் பார்வையாளர்களாகவும், 150 பேர் செலவினப் பார்வையாளர்களாகவும் பணிபுரிவார்கள்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்:
- தேர்தல்கள் எவ்விதத் தூண்டுதலும், மிரட்டலும் அல்லது வன்முறையுமின்றி, சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- மாதிரி நடத்தை விதிகளை (Model Code of Conduct) தீவிரமாக அமல்படுத்த வேண்டும். விதிமீறல்கள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் (இருக்கை, குடிநீர், நிழல் வசதி) இருப்பதை பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- ECINET voter turnout module-ல் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தரவுகளை உடனுக்குடன் பதிவேற்ற வேண்டும்.
பார்வையாளர்களின் தொடர்பு எண்களை விளம்பரப்படுத்தி, பொது மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க உதவ வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
