அமெரிக்காவின் நீண்டகால பொருளாதாரத் தடைகள் மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு போரின் தாக்கம் காரணமாக ஈரானின் பொருளாதாரம் கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. போரின் தாக்கத்தால் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி மையங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஈரான் தனது பொருளாதாரத்தை நிலைநிறுத்தப் போராடி வருகிறது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை யார் கட்டுப்படுத்துவது என்ற அதிகாரப் போட்டி, தற்போதைய பொருளாதாரப் போரின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
பிப்ரவரி 28, 2026-ல் தொடங்கிய போரைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து பலமுறை தடைபட்டுள்ளது. அவ்வப்போது திறப்பதும், மூடுவதுமான முரண்பாடான அறிவிப்புகளால் சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கடும் குழப்பத்தில் உள்ளன.
தற்போது நீரிணை தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்கா சில கப்பல்களுக்கு எதிராகத் தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து வருகிறது. இந்த மோதல் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடும் தடைகளுக்கும் மத்தியிலும், எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய் அரசாங்கத்திற்கு ஒரு தற்காலிக நிதிப் பாதுகாப்பை வழங்கி வருகிறது.
அரசாங்கம் தாக்குப்பிடிக்க முயன்றாலும், சாமானிய மக்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். நாட்டின் பணவீக்கம் 60% வரை உயரக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் கடும் பற்றாக்குறை மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சியால் மக்கள் அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்கப் பெரும் சிரமப்படுகின்றனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் தொழில்துறை மற்றும் எரிசக்தி கட்டமைப்புக்குச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன
பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இதுவரை இழுபறியிலேயே உள்ளன. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் உட்பட பல கட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், போர் மற்றும் பொருளாதார நெருக்கடி நீடிப்பது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சர்வதேச நாணய நிதியம் (IMF), இந்த போர் நீடித்தால் உலகப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

